மட்டக்களப்பில் இடம்பெற்ற தராக்கி டி. சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி டி. சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (28.04.2026) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது, தராக்கி சிவராமின் உருவப்படத்திற்கு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம் ஆகியோர் இணைந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நினைவு உரை
தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நினைவு உரைகளில், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான செ. பேரின்பராசா, இரா. துரைரெத்தினம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வ. சக்திவேல் ஆகியோர், தராக்கி சிவராமின் ஊடகப் பங்களிப்புகள் மற்றும் அவரது அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
இந்நிகழ்வு, தமிழ் ஊடக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற தராக்கி சிவராமின் சேவையை நினைவுகூரும் வகையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
