ஆங்கிலக் கால்வாயில் மீண்டும் துன்பியல்! பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்தவர்கள் பலி
பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த குடியேறிகளின் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஆறு குடியேறிகள் பலியாகியுள்ளனர்.
மீட்பு பணிகளின் போது 50 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். எனினும் விபத்துக்கு பின்னர் மேலும் பத்து குடியேறிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு குடியேறிகள் பலி

பிரான்சையும் பிரித்தானியாவையும் பிரிக்கும் கடற்பரப்பில் உள்ள ஆங்கிலக் கால்வாய் மீண்டும் ஒரு துன்பியலை நேற்று நள்ளிரவுக்குப்பின்னர் சந்தித்துள்ளது.
நேற்று இரவோடிரவாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த குடியேறிகளின் படகு ஒன்று அதிகாலை வேளையில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு குடியேறிகள் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக் குறித்த செய்தி கிட்டியவுடன் பிரித்தானியா மற்றும் பிரெஞ்சு கடலோர காவல்படையினர் உலங்கு வானூர்தி சகிதம் அதிகாலை 4 மணியளவில் உதவிக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விபத்துக்கு பின்னர் ஐந்து முதல் பத்து குடியேறிகள் வரை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ சிகிச்சை

பிரித்தானிய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டவர்கள் டோவர் கரைக்கு கொண்டுவரப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோல, பிரெஞ்சு கப்பல்களால் மீட்கப்பட்டவர்கள் கலே துறைமுகப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
2018 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான
குடியேறிகள் ஆங்கிலக் காய்வாயை கடந்து பிரித்தானியாவுக்குள்
நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.