பாகிஸ்தானில் கொடூர கொலை -வெளிவந்த மேலும் அதிர்ச்சிகர தகவல்கள்
பிரியந்த குமார தியவதன கொலையில் மேலும் ஆறு சந்தேக நபர்களை பஞ்சாப் காவல்துறையினர் இன்று (மே 5) அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், அவர்களில் மேலும் ஆறு முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிசிரிவி காணொளி மற்றும் தொலைபேசி மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் பதுங்கி இருந்ததாகபஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுவரை கைது செய்யப்பட்ட 124 பேரில் 19 பேர் பிரியந்த குமார தியவதன கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதில் "முக்கிய பங்கு வகித்தவர்கள்" என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் சந்தேக நபர்களை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி உமர் சையத் மாலிக் தெரிவித்தார்.
பிரியந்த குமார தியவதன படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 13 பேர் குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை காவல்துறையின் காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பர்ஹான் இட்ரிஸ், சபூர் பட், தல்ஹா, அப்துல் ரஹ்மான், இம்ரான், தைமூர், ஷோயப், ரஹீல், உஸ்மான், ஷஷைப், நசீர், எஸ்திஷாம் மற்றும் ஜுனைத் ஆகியோர் முக்கிய சந்தேக நபர்கள். இந்த குழு நாளை குஜ்ரன்வாலா தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது.
இதேவேளை பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார தியவடன தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் சில தகவல்களை பஞ்சாப் காவல்துறை பிரதானி சர்மார் அலி கான் நேற்று (04) வெளியிட்டுள்ளார்.
சம்பவம் ஏற்பட்ட தொழிற்சாலைக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு வரவுள்ளமையினால் அங்குள்ள இயந்திரங்களில் ஒட்டப்பட்டிருந்த மதம் சார்ந்த பதாகைகளை அகற்றுமாறு முகாமையாளரான பிரியந்த குமார தியவதனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சாலையில் பணியாளர்கள், பிரியந்த குமார தியவடன இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அவரை தாக்கிய பணியாளர்கள் அங்கிருந்து வெளியே அழைத்து சென்று வீதியில் வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர்.
விசாரணைகளுக்காக 160 சிசிரீவி காணொளி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளதோடு, தொலைபேசி தரவுகள் ஆராயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.