ரஷ்ய விமானம் தடுத்து வைப்பு - இலங்கைக்கு ஏற்படப்போகும் பேரிழப்பு
சுற்றுலா பயணிகளை இழந்த இலங்கை
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இலங்கைக்கு வரவிருந்த சுமார் 400,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கை இழக்க நேரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விமானம் புறப்படுவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், ஒட்டுமொத்த விமான ஊழியர்களும், சுமார் 200 ரஷ்ய பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாக நேரிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவரை அழைத்துப் பேசிய ரஷ்ய அரசாங்கம், இந்நிகழ்வு குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
தற்போது, ஏரோஃப்ளோட் இலங்கைக்கான தனது வணிக விமானங்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை சுமார் 400,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய-உக்ரைன் போர்
ரஷ்ய-உக்ரைன் போரினால் எழுந்த சர்வதேச கொந்தளிப்பைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யாவிற்கு பயணத் தடைகளை விதித்தன, இதன் காரணமாக முன்னாள் சோவியத் நாடு இலங்கையை சிறந்த பயண இடமாகத் தேர்ந்தெடுத்தது.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் உலகின் சில முன்னணி நாடுகள் இலங்கைக்கான பயணங்கள் தொடர்பாக தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இலங்கைக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது.
அதற்கிணங்க, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், இவ்வாறான தேவையற்ற தொந்தரவை உருவாக்கி, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஆபத்தில் ஆழ்த்த விரும்புவது யார் என்பது ஒரு கேள்வியாக இருக்கும் என்று கள வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
