நாட்டிற்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை கடும் வீழ்ச்சி...!
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த விடயத்தைச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலால் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரவிருந்த 768 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை
இதன் விளைவாகப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் நெருக்கடி இலங்கையின் ஏற்றுமதித் துறையையும் பாதித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் எட்டு சதவீதம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்குச் செல்வதாக சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நெருக்கடி தொடருமானால் தற்போது ஈரானுக்கு அனுப்பப்படும் தேயிலை ஏற்றுமதியில் 35 சதவீதத்தை மற்றொரு நாட்டிற்குத் திசைதிருப்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |