தொடருந்தில் பயணித்தவர் மீது கொடூரத் தாக்குதல்...! அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞருக்கு சிறை
அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞர் ஒருவருக்கு எட்டு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar - 22) என்ற இளைஞருக்கே இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது கண்ணாடிப் போத்தலால் தாக்கிப் பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இச்சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞரும் அவரது நண்பரான பேட்லி மாவினி ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தின் காட்சிகள் தொடருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் குறித்த வழக்கில் நண்பரான ஏற்கனவே பேட்லி மாவினிக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சரணீஸ் சிவகுமார் திங்கள்கிழமை கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக முன்னிலைப்படுத்தப்பட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மன உளைச்சல்
தனியாகப் பயணித்த நபர் ஒருவரை அணுகிய இவ்விரு இளைஞர்களும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் தொடருந்தை விட்டு இறங்க முயன்றபோது கதவுகளை மூடி அவரை இழுத்துச் சென்று தடுத்துள்ளனர்.

பின்னர் அந்த நபரின் பையை பறிக்க முயன்ற போது, சரணீஸ் சிவகுமார் அவரது மண்டையில் கண்ணாடிப் போத்தலால் அடித்து ரத்தக் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட நபர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து (Queensland) மாநிலத்தை விட்டே வெளியேறியுள்ளார்.
அதிகபட்ச தண்டனை
நீதிமன்றத்தில் தனது செயலைத் தற்காப்புக்காக (Self-defence) செய்ததாகச் சரணீஸ் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அதனை முற்றாக நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்தா தேவைப்படும்போது உங்களைத் தற்காத்துக் கொள்ள உங்களுக்கு உரிமையுள்ளது எனவும் ஆனால் ஒருவரின் தலையில் போத்தலால் அடிப்பது தற்காப்பு ஆகாது எனவும் இது நிரபராதி ஒருவர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்கான அதிகபட்ச தண்டனை 12 மாதங்கள் மட்டுமே என்பதால் சரணீஸுக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் ஏற்கனவே 89 நாட்களைக் (சுமார் 3 மாதங்கள்) காவலில் கழித்துள்ளதால் எஞ்சிய காலத்தைக் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனைப் பிணையில் கழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |