இலங்கையில் மனித வளத்தை நிர்வகிக்க திட்டமில்லை - மரிக்கார் சுட்டிக்காட்டு
இலங்கையில் மனித வளத்தை முறையாக நிர்வகிக்க திட்டம் எதுவும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் 1999 ஆம் வருடத்தில் நடந்த கதையொன்றையும், இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
“என் பாடசாலையில் கல்வி கற்றவர் தான் புத்திக்க, நாம் இருவரும் ராகம பகுதியில் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம்.
ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, நீ அரசியலில் சேர வேண்டும் என்று புத்திக்கவிடம் கூறினேன். அரசியலுக்கு வந்து என்ன செய்வது என அவர் வினவினார். நீங்கள் போக்குவரத்து அமைச்சரானால் செய்வதற்கு ஒன்று உள்ளது என நான் பதிலளித்தேன்.
நமது நாட்டில் மின்சார தொடருந்து அமைப்பு இல்லை,நவீன பேருந்து வசதி இல்லை. 20 ஆண்டுகளுக்குப் பின்னரும், நாம் ஒரே இடத்தில் இருக்கிறோம். சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளைப் பாருங்கள், இவற்றைச் செய்வதற்கு எம்மிடம் பணம் இல்லையே மரிக்கார் என புத்திக என்னிடம் வினவினார்.
எம்மிடம் பணம் இல்லை என பார்த்துக் கொண்டிருந்தால் வேலை நடக்காது என நான் கூறினேன்.” எனக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை
மேலும், மின்சார தொடருந்து அமைப்புகளை உருவாக்கவும், நவீன போக்குவரத்து வசதிகளை வழங்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நமது உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மனித வளத்தை நிர்வகிக்க வேண்டிய நேரத்திலேயே நாம் இன்னும் இருக்கிறோம். அதற்காக பெரும் கடன் வாங்குவதையும் நாம் எதிர்க்கிறோம்.
இதற்கு வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்கே எமது உட்கட்டமைப்பு வசதிகள்? இதில் முதலீடு செய்கிறீர்களா என கேட்கலாம். உதாரணமாக, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் (Singapore Changi Airport ) அப்படிக் கட்டப்பட்டதாகும்.
தமது செலவையும் நியாயமான இலாபத்தையும் பெறும் வரை அதை அவர்கள் வைத்துக் கொள்வர், அதன்பின்னர் அது உரிய நாட்டுக்கே சொந்தமாகும்.
மின்சார தொடருந்து திட்டம்

இன்றும் பெலியத்தையிலிருந்து கொழும்பு வரையும், கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையும் மின்சார தொடருந்து அமைப்பு இருந்தால் ஒன்றரை மணித்தியாலத்தில் பயணத்தை நிறைவு செய்து கொள்ள முடியும். அப்படி நடந்தால் கொழும்பில் விடுதிகளுக்கான பிரச்சினை தீர்ந்துவிடும். கொழும்பில் பணிக்காக வருவோர் விடுதிகளில் தனிமையாக இருக்காமல், தமது குடும்பத்தாருடன் பொழுதை கழிக்க முடியும்.
அத்துடன், நாம் கடன் செலுத்தும் நாடாக மாற மாட்டோம். நமது நாட்டுக்கு 20 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி தேவைப்படுகிறது.எனினும், ஒரு முதலீட்டாளர் கூட அதனை கொடுக்க முன்வருவதில்லை.
வெளிநாட்டினத்தவர் ஒருவர் கொழும்பு ஹில்டனில் தங்கினால், அங்கிருந்து மதிய நேரத்தில் கொள்ளுப்பிட்டிக்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகிறது முதலீட்டாளர் ஒருவர், தான் முதலீட்டை மேற்கொள்ளும் பகுதியிலிருந்து தமது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்காக துறைமுகத்திற்கான பயண நேரம், செலவு போன்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவார்.
இன்றும் குறித்த விடயங்களில் நாம் கீழ் மட்டத்தில் தான் இருக்கிறோம். நாம் முதல் படியாக போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நினைக்கின்றேன் என கருத்து தெரிவித்துள்ளார்.