யாழில் சோலர் அனுமதியில் தொடர்ந்த முறைகேடுகள் : விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு
யாழ் சோலார் இணைப்பில் ஏற்படும் முறைக்கேடுகள் தொடர்பில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission of Sri Lanka) தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கூரைமேல் சோலர் இணைப்பு வழங்கும் போது, புதிய இணைப்பு மற்றும் கட்டமைப்புக்கான நிறுவுதலுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதையும் கோர முடியாது ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு கூரைமேல் சோலர் இணைப்பு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தார்.
செல்வாக்கின் அடிப்படை
இந்தநிலையில், அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, குறித்த பாவனையாளர் இது தொடர்பில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்தார்.
முறைப்பாட்டை அடுத்து, முறைப்பாட்டாளருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட நிலையில், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் கோரியுள்ளது.
மேன்முறையீடு
இதையடுத்து, இவ்வாறு பணம் கோரியமைக்கான ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பாவனையாளர் மேன்முறையீடு செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில், இலங்கை மின்சார சபை கூரைமேல் சோலர் இணைப்பு அனுமதி வழங்கும் போது, அந்தந்தப் பகுதிகளுக்கான மேலதிக புதிய இணைப்பு மற்றும் கட்டமைப்புக்கான நிறுவுதலுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதையும் கோர முடியாது என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு மீண்டும் பணித்திருக்கிறது.
இதனுடன், சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலர் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளது.
இந்த முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பல அனுமதிகள்
இருப்பினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலர் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார்.
இந்தநிலையில், தொடர்ந்த இந்த முறைக்கேடுகள் விவகாரம் தொடர்பில் தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
