இந்தியாவிடம் இருந்து மின் துண்டிப்புக்கு தீர்வு !
இந்தியாவிடம் இருந்து எரிபொருளைப் பெற்று மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண உள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
மின்சார துண்டிப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேவை ஏற்படின் இந்த கலந்துரையாடலில் தாம் பங்கேற்பதற்குத் தயாராகவுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக சூரிய மின் தொகுதிகளை வழங்குவதற்கு மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அதற்கமைய, 14000 வீடுகளுக்கு 5 வாட் மற்றும் 10 வாட் மின்வலு கொண்ட சூரிய மின் தொகுதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.