இலங்கையர்களிடம் பசில் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நிவாரணங்களை வழங்க முழுமையாக முயற்சித்து வருவதாகவும், மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையை அவ்வாறே வைத்திருக்குமாறும் அவர், ஊடகவியலாளர்கள் நேற்றைய தினம் கொழும்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவெடுக்கிறது. தற்போது உக்ரைன் ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ள நிலையிலும், நிவாரணங்களை வழங்க நாம் முழுமையாக முயற்சித்து வருகிறோம்.
மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை அவ்வாறே வைத்திருக்குமாறு கோருகிறேன். அரச தலைவர், பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு எம்மால் தலையீடு செய்ய முடியாது.
உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறேனும் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.
