சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தவர்கள் :ஒரே நாடு ஒரே சட்டம்!!
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கொடி, ஒரே பெயர் என இலங்கையை தனிச் சிங்கள தேசமாக அறிவிக்கும் செயற்பாடுகள் இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதலே தொடங்கிவிட்ட ஒன்றுதான்.
ஆனால் அதற்கு எதிராக தமிழ் மக்கள் மிக கடுமையாக போராடினார்கள்.
ஆகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தமிழர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததன் காரணமாக இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தனிச் சிங்கள தேசியவாதத்தை சிங்கள ஆட்சியாளர்களால் முழுமையாக அமுல்படுத்த முடியாது போனது.
குறித்த தனிச் சிங்கள தேசத்தை அமுல்படுத்துவதற்காகவே கடந்த எழுபது ஆண்டுகளாக இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்கள் மீது மிக மோசமான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட ன.
இதனால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின.
கடைசியில் இந்த வன்முறைகள் ஆயுத மோதலாக உருவெடுத்தது. இதனால் இந்த நாடு சுடுகாடாக மாறியது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் இலங்கையில் தனிச் சிங்கள தேசத்திற்கான கோரிக்கைகளும் சிறுபான்மை இன மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்க தொடங்கின.
கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழ் மக்களை இலக்கு வைத்து வன்முறைகளை தூண்டிய சிங்கள பௌத்த இனவாதிகள் தற்போது இஸ்லாமிய சமூகத்தை நோக்கி தங்களது இன ரீதியான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
பொது ஜன பேரமுன கட்சியின் தேர்தல் முதலீடே இந்த ஒரே நாடு ஒரே சட்டம்!
பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி தேர்தல் களத்தில் போட்டியிட்டவர்கள் தனிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைத்தே தேர்தலில் இறங்கினர். தமது தேர்தல் வெற்றிக்காக உள்நாட்டு வெளிநாட்டு சிங்கள பௌத்த இனவாத அமைப்புகளை உள்வாங்கி அவர்களை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தினர்.
இவ்வாறு தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தப்பட்ட பல பிக்குகள் அமைப்பும் உள்ளன. அதில் முக்கியமானது கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பாகும்.
குறித்த அமைப்புகளின் ஆதரவை தனது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திய ஜனாதிபதி அவர்கள் அவர்களுடன் சில இரகசிய ஒப்பந்தங்களையும் செய்திருந்தார் என கூறப்படுகிறது.
அதில் மிக முக்கியமான ஒப்பந்தமாக இந்த ஒரே நாடு ஒரே சட்டம் இருக்கிறது.
பொதுஜன பெரமுன கட்சி ஆட்சிபீடம் ஏறிய பின்னர் ஒரு கட்டத்தில் தங்களது வெற்றிக்காக பயன்படுத்தப்பட்ட இனவாத சக்திகள் எல்லாம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அரசுக்கு எதிராக மாறியிருந்தன.
ஆனால் தற்போது அரச பங்காளி கட்சிகளுக்குள் உருவாகி வரும் விரிசல்கள், பங்காளி கட்சிகளின் தனித்து செயற்படும் முடிவுகள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களை மீண்டும் சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இன் நிலையில் தான் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி சிங்கள பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தி அதன் ஊடாக ஆட்சியை தக்க வைக்க முடியும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இவ்வாறான விபரீத முடிவுகளை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் கூறியது: 'ருவன்வெலிசாயவை வழிபட நான் சென்றிருந்தேன். அங்கு நான் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது - இளம் வயது பிக்கு ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்டார், 'ஜனாதிபதி அவர்களே, ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதாகக் கூறினீர்களே. அதனை நாம் மிகவும் எதிர்பார்த்திருக்கிறோம்' என்று. இந்த வருட இறுதிக்குள் அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். அத்தோடு - அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும், அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்"
கடந்த ஒக்டோபர் மாதம் மாலை, ருவன்வெலிசாயவை வழிபட சென்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய இளம் வயது பிக்குவிடம் வாக்குறுதி அளித்தமை தொடர்பாக இவ்வாறு கூறியிருக்கிறார் என்றால் இந்த ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பாக அனைத்து சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் பிக்குகளும் ஏற்கனவே இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்தை முன்மொழிந்து அதற்கு ஜனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்ததன் காரணமாகவே தற்போது ஞானசாரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி குழு உருவாக்கப்பட்டு அதனை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பது என்னவாக இருக்கும்?
இந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ன என்பது குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. காரணம் அந்த ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு நியமிக்கப்பட்ட தலைவர் அவரது பின்னணி, அவர் சார்ந்த அமைப்புக்களின் கொள்கைகளை பார்க்கும் பொது இலங்கை மீண்டும் ஒரு மியன்மாராக மாறிவிடுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது.
காரணம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மியன்மாரில் இருந்து வந்த இனவாத பிக்குகள் அமைப்புன் இணைந்து பொது பல சேனா அமைப்பு வெளியிட்ட கொள்கை பிரகடனமே- அதாவது அவர்கள் இலங்கையில் இனி 'சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தவர்கள்' என்ற வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்ற பிரகடனத்தை வெளியிட்டிருந்தார்கள்.
மியன்மாரின் சர்ச்சைக்குரிய அஷின் விராத்து தேரர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொது பல சேனா அமைப்பின் நிகழ்வு கடந்த 2014 செப்டம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்றது,
இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு கொழும்பில் தனது மாநாட்டை நடத்தியது.
இதற்கு மியன்மாரின் சர்ச்சைக்குரிய கடும்போக்கு பௌத்த அமைப்பான 969 என்ற அமைப்பின் ஸ்தாபக தலைவர் அஷின் விராத்து தேரர் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய அஷின் விராத்து தேரர், முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல தொடர்ந்தும் இலங்கையின் பொது பல சேனா அமைப்போடு சேர்ந்து இயங்கவுள்ளதாகவும் மாநாட்டில் விராத்து தேரர் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்துவருவதாகவும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பதை உறுதிப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கப்போவதாகவும் பொது பல சேனா அமைப்பின் தலைவர்கள் இங்கு தெரிவித்திருந்தார்கள்.
இங்கு பேசிய பொது பல சேனாவின் தலைவர்களில் ஒருவரான திலந்த விதானகே, இலங்கையின் பெயரை 'சிங்கள அரசு' என்று மாற்ற வேண்டும் என்றும் இலங்கையிலுள்ள இந்துக்களை சிங்கள இந்துக்கள் என்றும், கிறிஸ்தவர்களை சிங்கள கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லிம்களை சிங்கள முஸ்லிம்கள் என்றும் அழைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இலங்கையின் தேசியக் கொடியில் பல்லினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களை மாற்றி தனிச் சிங்கள அடையாளத்தை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்றும் அதற்கான அரசியல் நடவடிக்கைளில் இறங்கப் போவதாகவும் தங்களின் திட்டங்களை பொது பல சேனா அமைப்பு இங்கு வெளியிட்டது.
ஆனால் அவர்களது இந்த செயற்பாடுகளுக்கு நல்லாட்சி அரசு இணக்கம் தெரிவிக்காத நிலையிலேயே பொது பல சேனா உள்ளிட்ட பல பிக்குகள் அமைப்புகள் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவருவதற்கு துணை போனார்கள்.
அதன் பின்னர் ஆட்சி பீடம் ஏறிய கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசில் இந்த பொது பல சேனா அமைப்பின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற தனிச் சிங்கள தேசமாக அறிவிக்கும் முயற்சிகளும் அதற்கான கொடி ஒன்றையும் ஆங்காங்கே பல இடங்களில் சிங்கள இனவாத சக்திகள் தூக்கிப் பிடித்து திரிந்த நிலையில் தற்போது இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் இந்த 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற விடயம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதால் இதன் தாக்கம் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழ் முஸ்லிம், மற்றும் கிருஸ்தவர்கள் மீதான வன்முறைகளுக்கு வித்திடலாம் என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.