சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 10 நாட்களுக்கு முன்பு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சோனியா காந்திக்கு இலேசான காய்ச்சல் மற்றும் வேறு சில அறிகுறிகள் உள்ளதால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் கூறினார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (75) கொவிட் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
மேலும், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் தொடர்பான பாதிப்புகள்
இது குறித்து ரன்தீப் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொவிட் தொடர்பான பாதிப்புகள் காரணமாக இன்று கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய உடல்நிலை சீராக உள்ளதால், மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை பற்றி அக்கறைகொண்டுள்ள மற்றும் நலம் விரும்பும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.