2023-ஆம் ஆண்டில் வரி ஏய்ப்பு செய்தவர்களின் தகவல்களை வெளியிட விசேட உத்தரவு
2024ஆம் ஆண்டு கடப்பாடுகளை(Obligations) அறவிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வரி செலுத்துநர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை, வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு (RTIC), உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், 2023 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி மொத்தம் ரூ.84 பில்லியன் வரி மிகுதி வைத்திருந்த செலுத்துநர்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய தொகையின் விபரங்களையும் வெளியிடுமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவில், RTIC தலைவர் தயா லங்காபுர மற்றும் ஆணையாளர்களான ஓய்வுபெற்ற நீதியரசர் டி.என். சமரக்கோன், சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன மற்றும் ஏ.எம். நஹியா ஆகியோர், குறித்த ஊடக அறிக்கையின் அடிப்படையில் ரூ.57 பில்லியன் வரிச்சலுகை பெற்ற தனிநபர்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிடுமாறு உத்தரவிட்ட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு வர வேண்டிய தொகை
இந்தத் தொகை தற்போது அரசாங்கத்திற்கு வர வேண்டிய தொகையாக இல்லாமல் போயுள்ளதால், அது தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கைப் பிரஜையான ஆர்.பி.ஜே. சுரங்கா கோரிய தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்தபோதே ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த தகவல்கள் தனிப்பட்ட தகவல்கள் என்றும், அவற்றை வெளியிடுவதில் பொதுநலன் இல்லை என்றும், மேலும் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 100 மற்றும் 191ஆவது பிரிவுகள் இத்தகவல்களை வெளியிடுவதைத் தடுக்கின்றன என்றும் IRD தனது மறுப்புக்கான காரணமாக தெரிவித்திருந்தது.
எனினும், இந்த நிலைப்பாட்டை ஏற்க மறுத்த RTIC, இங்கிலாந்தின் வரிச் சட்டங்களையும் அந்நாட்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளது.
யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம்
முழுமையான தடையாக அமையாது
வரலாற்று ரீதியாக நிலவி வரும் வரி ரகசியம் என்ற கட்டுப்பாடு, தகவல்களை வெளியிடுவதற்கு முழுமையான தடையாக அமையாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் HMRC நிறுவனத்திலும் வரி தொடர்பான தகவல்களின் இரகசியத்தன்மை அடிப்படைக் கொள்கையாக இருந்தபோதிலும், திட்டமிட்டு வரி செலுத்தத் தவறும் நபர்களின் பெயர்களை வெளியிடுவது பொருளாதார நலனை வலுப்படுத்துவதற்கு அவசியமானது எனக் கருதப்பட்டுள்ளதாக RTIC சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையிலும் வரி நிர்வாகத்தின் ஆரம்பக் கொள்கை இரகசியத்தன்மையாக இருந்தாலும், இரகசியத்தன்மை மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியாது என ஆணைக்குழு தீர்மானிதுள்ளது.
குறிப்பாக, பொதுமக்களின் நிதியைப் பாதிக்கும் வரி பாக்கியாளர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதில் பொதுநலன் காணப்படுவதால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5(4) பிரிவின் கீழ் பொதுநலன் அடிப்படையில் தகவல் வெளியிடப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
“விகிதாசாரச் சோதனை பயன்படுத்தப்பட வேண்டும். தகவல்களை வெளியிட மறுப்பதற்கு IRD பொதுவான இரகசியத்தன்மையை அல்ல, குறிப்பிட்ட பாதிப்பை நிரூபிக்க வேண்டும்” என RTIC வலியுறுத்தியது.
மேலும், இங்கிலாந்தின் HMRC நடைமுறையில் திட்டமிட்டு குறைவாக வரி செலுத்தியதாக கண்டறியப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விபரங்களை வெளியிடும் ‘Name and Shame’ நடைமுறை அமுலில் இருப்பதையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |