தெற்கில் மீட்கப்பட்ட பாரியளவு போதைப்பொருள்: கழுகுப் பார்வையில் விசாரணை அதிகாரிகள்!
மாத்தறை - தெவிநுவர பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் விசாரணை அதிகாரிகள் அதிக அவதானம் செலுத்தியுள்ளனர்.
அண்மையில் தெற்கு கடற்பரப்பில் 54 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் விசாரணை அதிகாரிகள் இவ்வாறு விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தொகையை இந்நாட்டுக்கு கொண்டுவர பிரதானமாக செயற்பட்டவர் தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது கொரியாவில் வசித்து வருவதாகவும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வலையமைப்பு
அத்துடன், குறித்த நபர் இதற்கு முன்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நபர் தற்போது குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் வலையமைப்பில் இணைந்துக்கொண்டவரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் கண்டுபிடிக்கபட்ட 839 கிலோகிராம் போதைப்பொருள் தொகையும் தெவிநுவர பிரதேசத்தை மையமாகக் கொண்ட கடத்தல்காரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதால் இவ்விடயங்கள் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் அதிக அவதானம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொகை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், தெவிநுவர பிரதேசத்தில் உள்ள ஒருவர் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இவ்வாறு படகு மூலம் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
பலநாள் மீன்பிடி படகுகள் மூலம் இலங்கையின் தெற்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
