புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர்விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் பாரிய எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவது தாமதமாகும் என சிறிலங்கா நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிக்கும் முகமாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மார்ச் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தாம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் போதிய ஆலோசனைகளின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.
தாமதம்
இவ்வாறு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியில், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மாத இறுதி அல்லது மே மாத முதல் வாரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
