இளைஞரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரியின் பதவி பறிப்பு!
குருநாகல் யக்கஹாபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி, அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ உயர் அதிகாரி பொதுமகன் ஒருவரை காலால் உதைக்கும் காணொளி காட்சிகள் சமூக ஊடக தளங்களில் பரவியதை அடுத்து, குறித்த அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை லெப்டினன்ட் கேணல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.
05 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை, குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் படைப் பிரிவின் இராணுவ காவல்துறையினரும் சமாந்தரமான இராணுவ விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் நேற்று திங்கட்கிழமை குறித்த சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பான பிரச்சினையை ஆராய்ந்து அதன் பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரிகேட் கமாண்டர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்திருந்தது.