சிறிலங்கா அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைக்கக்கூடாது!
கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அது தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கத் தயங்குகின்றது.
எனவே ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
களவு செய்கின்ற ஆட்சியாளர்கள் தான் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள். இனி இவற்றை விட்டு விட்டு நாட்டுக்கு ஒரு நேர்மையான அரசியல் தலைவரைத் தேர்வு செய்யவேண்டும். அரசாங்கத்தின் சொத்துக்களைச் சூறையாடுகின்றவர்களை நாங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
நாட்டின் ஆட்சியை அமைக்கின்ற செல்வாக்கும் தகுதியும் சஜித் பிரேமதாஸவுக்குத் தான் உள்ளது. அவரால் தான் உறுதியான ஆட்சியை நிறுவ முடியும். இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு புத்திய திட்டங்களினூடாக பணிப்பதற்கு எமது கட்சியின் உயர் பீடம் திட்டம் தீட்டியுள்ளது.
இதில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கை ரீதியான வேலைத்திட்டங்களை நாம் இணைத்துள்ளோம். கடந்த அரச தலைவர் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு இப்பகுதி மக்கள் அமோகமாக வாக்களித்திருந்தார்கள். அதுபோல் அவருடைய தலைமையிலான ஆட்சி மிக விரைவில் நிறுவப்படும்.
அதற்காக வேண்டி மக்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்திருக்க வேண்டும். முதல்கட்டமாக பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள 116 வாக்களிப்பு நிலையங்களையும் மையப்படுத்தி குழுக்களை அமைக்க வேண்டும். நாட்டில் ஒரு நேர்மையான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நாட்டில் தற்போது ஊடகத்துறைக்கு ஒரு அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்ற போது ஊடகங்களைப் பயம் காட்டுகின்றார்கள். நேற்றய தினம் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனார்.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஊடக தர்மமாகும். அதனைக் காப்பாற்ற வேண்டியது யார்? தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வந்த அரச தலைவரால் அது இன்று நடைபெறவில்லை.
ஊடகவியலாளர் ஒருவர் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளது. இதனைப் பாதுகாகக்க வேண்டியுள்ளது. இவ்வாறு நடைபெறுகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் தான் பொறுப்புக்கூற வேண்டும்.
கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அது தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கத் தயங்குகின்றது.
எனவே ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைக்கக்கூடாது என அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரன, இம்ரான் மஹ்றுப், மற்று கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







