பிள்ளையான் கள்ளத்தோணியில் தப்பிச் சென்றாரா- உண்மையை வெளிப்படுத்திய பிரசாந்தன்!
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) கள்ளத்தோணியில் மலேசியா செல்லவில்லை எனவும் செயலாளர் ஆசாத் மௌலானா சுவிஸ் நாட்டில் அகதி தஞ்சம் கோரவில்லை எனவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது.
ஊடகங்கள் மற்றும் போலி முகநூலில் செய்யப்படும் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியா தப்பிச் சென்றார் என்று உள்நாட்டு, சர்வதேச தமிழ் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் அந்த செய்திகள் பொய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஊடகங்களையும் முகநூல் பிரச்சாரம் செய்பவர்களையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரசாந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலையில் ஊடகங்களை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து வரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் அறிக்கை மற்றும் வீடியோக்களை மாத்திரம் எங்கோ இருந்து வெளியிட்டு வருகின்றனர்.
ஆகவே இது குறித்த உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் வெளியில் வந்து ஊடக சந்திப்புகளை நடத்தி ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கி விட்டு ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் எனவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
