இந்தியாவின் உதவியை நாடுவோம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ஸ்ரீலங்காவில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் 211 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 269 பேர் கொல்லப்பட்ட கொழும்பு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 9 பேர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்ளூர் மதகுரு நௌபர் மௌலவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவருக்கு அஜ்புல் அக்பார் உடந்தையாக செயல்பட்டுள்ளார். மேலும் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் மனைவியான சாரா ஜாஸ்மீன் உயிருடன் இருந்தால் அவரை இண்டர்போல், இந்தியா உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.