உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இழுக்கடிக்கப்படும் விசாரணை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு மிக மந்தகதியில் நடைபெறுவதாக கொழும்பு (Colombo) பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ (Cyril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் திருப்திகரமான நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் மிக மெதுவானவையாக காணப்படுவதாகவும் இது தொடர்பாக உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய விசாரணைகள் உட்பட தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
கடந்த ஆறு வருடங்களாக எதுவும் இடம்பெறவில்லை,விசாரணைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன,இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் ஒட்டுமொத்த செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுகின்றன, மெதுவாக இடம்பெறுகின்றன என்பதால் எதுவும் இடம்பெறவில்லை என்பது அர்த்தமில்லை.
எங்கு தவறு இடம் பெற்றுள்ளது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆதரவு திருப்திகரமானதாக இல்லை, இதன் காரணமாகவே நாங்கள் தனியான ஒரு வழக்குரைஞர் அலுவலகத்தை கோருகின்றோம்.
அந்த அலுவலகம் தொடர்புடைய விசாரணைகளுக்கு உதவுவதோடு, பயங்கரவாத தாக்குதல்களை ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதோடு, சில நபர்களுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதும் அடங்கும்” என கொழும்பு பேராயரின் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
