உக்கிர நெருக்கடிக்குள் நாடு- சிறிமா கூறியதை நினைவுபடுத்தி எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் பிரதி ஆளுநர்!
இலங்கை மத்திய வங்கி போன்ற நிறுவனங்கள் அழகான வார்த்தைகளால், நிலைமையை கட்டியெழுப்பும் விடயங்களை கூறாது, நாட்டின் உண்மையான நிலைமையை மக்களுக்கு கூற வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு மிகவும் உக்கிரமான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருப்பதாகவும், எதிர்காலத்தில் இலங்கை லெபனான், துருக்கி போன்ற நாடுகளின் நிலைமைக்கு செல்லும் எனவும் முன்னாள் பிரதி ஆளுநர் டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கை தற்போது பிச்சைக்காரனின் நிலைமைக்கு சென்றுள்ளதாகவும் இந்த நிலைமையை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த 12 மாதங்களுக்கு மக்கள் குறிப்பாக அரச தலைவர் உட்பட கீழ் மட்டத்தில் இருக்கும் அனைவரும் சிரமமான அர்ப்பணிப்புகளை செய்ய தயாராக இருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், உக்கிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும்.
உண்மையில் எதிர்காலத்தில் நாம் பிச்சைக்காரனின் நிலைமைக்கு செல்வோம். பிச்சைக்காரனுக்கு சூடான சோற்றை பெற முடியாது. இந்த விடயத்தை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மையில் நாடு உக்கிரமான பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்றது. ஆகவே மக்களின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.1971 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இப்படியான நிலைமை காணப்பட்டது.
அப்போது நாட்டின் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தேசிய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாம் எரிமலைக்கு மேல இருக்கின்றோம். அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம்.
இதனால், அனைவரும் ஒன்றிணைந்து, எரிமலை வெடிப்பதை தடுக்க வேண்டும் எனக் கூறினார். இதனால், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் மிக தெளிவாக நாட்டு மக்களுக்கு கூற வேண்டும் எனவும் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.