பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்- இரகசிய வாக்குமூலத்தையடுத்து குற்றத்தடுப்பு பிரிவிற்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை நேற்று முந்தினம் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொரளை கத்தோலிக்க தேவஸ்தானம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் 2 மணி நேரமாக இரகசிய வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் அவர் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபர்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 2ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேவாலயத்தின் ஊழியர் பிரான்சிஸ் முனீந்திரன் உள்ளிட்ட மூவர் சார்பில் முன்னிலையான அரச தலைவர் சட்டத்தரணி ரீயென்சி அர்சகுலரத்ன, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொள்ளும் முறை தவறானது என குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.