கொரோனாவை கட்டுப்படுத்தும் பாணி தயாரித்த தம்மிக்கவின் சகோதரர் கொரோனவால் உயிரிழப்பு!
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் மருத்துவ பாணி தயாரித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டவரின் சகோதரர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்த அவரின் சடலம் கேகாலை மஹர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன் போது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது இறுதிக் கிரியைகள் நேற்று கேகாலை மயானத்தில் கொவிட் சுகாதார விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மிக்க பண்டார தயாரித்த கொவிட் பாணி சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்ததுடன், அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சியும் அதனை பருகி உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்தப் பாணி நாடாளுமன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சபாநாயகர் உட்பட பலர் அதனை பருகியிருந்தனர். எனினும் கொவிட்டுக்கு எதிரான மருந்தாக அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
