சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் - அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் அறிவிப்பு!
பிணை முறி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளை மூவரடங்கிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதற்கமைய பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன மகேந்திரன் மற்றும் ஒன்பது பேரை குற்றச்சாட்டுகளில் இருந்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் விடுதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளையே மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
கைவிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என கொழும்பு நிரந்தர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி அர்ஜூன் அலோசியஸ், அர்ஜுன மகேந்திரன், ஜெப்ரி அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவுள்ள சட்டத்தரணிகள்
இந்த நிலையில் பிணைமுறி வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், 01 முதல் 04 வரையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அடுத்த நீதிமன்ற அமர்வில், தமது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக மன்றில் அறிவித்துள்ளனர்.
இதனால் மொத்தம் 14 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வழக்கில் 05 முதல் 14 வரையிலான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
