மாற்றத்தை உருவாக்கியது நாமே - மார்தட்டும் ராஜபக்ச அரசு
இலங்கைக்குள் சட்டவிரோதமாக படகுகளில் பிரவேசிப்பவர்களை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக ஆளும் பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.
அன்று சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து பலர் அவுஸ்திரேலியா சென்றதாக குறிப்பிட்ட பிரேம்நாத் தொலவத்த, இன்று சட்டவிரோதமாக படகுகளில் இலங்கைக்குள் பலர் பிரவேசிப்பதாகவும் அது கோட்டாபய - மஹிந்த அரசாங்கம் உருவாக்கிய மாற்றம் என்றும் கூறினார்.
கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிகள் வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை கொழும்பு - கொத்தட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தொலவத்த,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தலில் ஈடுபடக்கூடிய வசதியளிக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
வெளிநாடுகளிலுள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்தால் தான் எமக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்றது. நாங்கள் இந்த நாட்டை பெற்றுக்கொண்ட ஆரம்பகாலத்தில் நாட்டை விட்டுச் செல்லவே மக்கள் எண்ணியிருந்தார்கள்.
ஆனால் கொரோனா முதலாவது அலையின் இடையே வெளிநாட்டிலுள்ள இலங்கை பிரஜைகள், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் இலங்கைக்கு வரவே துடித்தார்கள்.
இன்று ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இன்று செல்ல இடமில்லாதிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் ஈடுபட இலங்கையை தெரிவுசெய்ய முடியும். அவர்களுக்கான சுற்றுலா நடவடிக்கையை எடுத்து நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும்.
மறுபக்கத்தில் படகுகளின் ஊடாக சட்ட ரீதியற்ற வகையில் இலங்கைக்குள் எவராவது பிரவேதித்தால் அதனை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்று எமது நாட்டிலிருந்து திருட்டுத்தனமாக படகுகளில் அவுஸ்திரேலியா சென்றார்கள். ஆனால் இன்று சட்ட ரீதியற்ற வகையில் படகுகள் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்க பலரும் முயற்சிக்கின்றனர். இதுவே நாங்கள் ஆட்சிக்குவந்த பின்னர் ஏற்படுத்திய மாற்றமாகும் என்றார்.