இலங்கையின் நாளாந்த கொவிட் தரவுகளில் குழப்பம்
இலங்கையில் நாளாந்தம் சுமார் 2 ஆயிரம் பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண (Upul Rohana) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. சரியான தரவுகள் ஊடகங்கள் வழியாக வெளிப்படுவதில்லை.
நாளாந்தம் 2000 வரையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன.
அதேபோல் அனேகமான சிகிச்சை மத்திய நிலையங்களில் உள்ள இடவசதிகளும் நிரம்பியுள்ளன. கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த அனேகமான சிகிச்சையை மத்திய நிலையங்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமை எதிர்காலத்தில் சுகாதார தரப்பால் சமாளிக்க முடியாத அளவுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கலாம். தற்போதுள்ள நிலைமை எதிர்காலத்தில் மேலும் தீவிரம் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார்.
இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்று உறுதியான மேலும் 942 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
