போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுக்கவில்லை!
எனது கட்சியோ அல்லது எனது கூட்டணியோ ஒருபோதும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுக்கவில்லை எதிர்காலத்திலும் அது மாறாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(18) சந்தித்தனர்.
இதன்போதே சஜித் பிரேமதாச காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்தார்.
புதிய அதிபர் இந்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், போராட்டக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் தமது நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போராட்ட பிரதிநிதிகளின் கருத்து
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே காலி முகத்திடல் போராட்டக்கார்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்ததாகவும் போராட்டக்கார்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் முன்வைக்கும் ‘செயற்திட்டத்தை’ எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.
