இலங்கைக்கு சாதக நிலை - கடன்களை மீளச்செலுத்த 25 வருட சூத்திரம்
பாரிய கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பாரிஸ் கிளப் இலங்கையின் கடனை மீளச் செலுத்த 10 வருட கால அவகாசத்தை பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவை முன்வைத்துள்ளது.
இதன் மூலம் இலங்கையின் கடன்களை காலம் தாழ்த்திக் கொடுப்பதற்கான சட்ட உரிமை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு சூத்திரமாக பாரிஸ் கிளப் மேலும் 15 வருட கால கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களான இந்தியா மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களில் பாரிஸ் கிளப்பின் இந்த முன்மொழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் மட்ட உடன்படிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியிருந்தாலும் அதன் உதவியை பெற்றுக் கொள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கடன் உத்தரவாதங்கள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் கடனை மறுசீரமைக்க தாம் தயாராக இருப்பதாக பாரிஸ் கிளப் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.