குழந்தைகளுக்கு பால்மா இறக்கு மதிக்கு டொலர் இல்லை அரசியல்வாதிகள் எவ்வாறு சுற்றுலா செல்கின்றனர்?
நாட்டில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பால் மாவை இறக்குமதி செய்ய டொலர் இல்லாத நிலைமையில், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநாடு செல்ல எங்கிருந்து டொலர் கிடைத்தது என ஐக்கிய தேசிய கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யக் கூட நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லை. எனினும் அரசியல்வாதிகள் குடும்பங்களுடன் வெளிநாடு சுற்றுலாப் பயணம் செல்லவும் ஆலயங்களுக்கு சென்று பூசைகளை நடத்தவும் டொலர் இருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படையை கொண்ட இடதுசாரி அரசாங்கங்கள் பதவிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு பசியும் பட்டினியுமே உரிமையானது எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.