உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் சாரா தொடர்பில் மீண்டும் எழுந்துள்ள சந்தேகம்!
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்திய 13 பேரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் மரபணு பரிசோதனை நடத்துவதற்கான ஆணையை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக காவல்துறை ஊடகப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மீண்டும் மரபணு பரிசோதனைகளை நடத்துவதன் மூலம் சாரா ஜஸ்மின் உயிருடன் இருக்கின்றாரா அல்லது இறந்து விட்டாரா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 170 பேர் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்களில் 45 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 13 பேர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை தாக்குதல் நடத்திய சஹ்ரான் உட்பட கொலையாளிகளை அடிப்படைவாத கொள்கையை நோக்கி கொண்டு சென்றவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலி என்ற நபர் எனவும், இவரே ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைகளை இலங்கைக்கு கொண்டு வந்தவர் எனவும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.