மாகாண சபை தேர்தலை நடத்தினால் ... அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
மாகாண சபை தேர்தல் இலங்கைக்கு பொருத்தமற்றது. மாகாண சபை முறைமை ஊடாக எவ்வித பயனும் ஏற்படவில்லை.
மாறாக மிதமிஞ்சிய செலவுகள் மாத்திரமே ஏற்பட்டுள்ளன. எனவே மாகாண சபை தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.
தவறின் மகா சங்கத்தினரை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எம்பிலிபிடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு நாட்டு மக்கள் எங்கும் குறிப்பிடவில்லை.
மாறாக அரசியல்வாதிகளே மாகாண சபை முறைமை ஊடாக இலாபம் பெற்றுக் கொள்ளப் போராடுகிறார்கள்.
தேர்தல் காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முயல்கிறது.
தேர்தல் முறைமை காரணமாக மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. மாகாண சபை நிர்வாகம் ஜனாதிபதியின் பிரதிநிதிகளினால் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்துச் செய்து உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அரசியல்வாதிகளின் சுய நல தேவைக்காக மாகாண சபை முறைமை நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, மாகாண சபை தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொருளாதார ரீதியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனை விடுத்து மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிப்பது பயனற்றது என மேலும் தெரிவித்தார்.
