காலை முதல் மாலை வரை காவல் நிலையங்கள் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டிய பரிதாப நிலையில் கோட்டாபய!
நாடு திரும்பும் கோட்டாபய ராஜபக்சவுக்கு தண்டனை எதுவும் கிடைக்காவிட்டாலும் அவர் நீண்டகாலம் தினமும் காலை முதல் மாலை வரை காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரிவதை தவிர்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய பல தரப்பினர் தயாராகி வருவதாக தென்னிலங்கை இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய தயாராகி வரும் தரப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
கோட்டாபயவின் கட்டுப்பாட்டில் இருந்த அரச நிறுவனங்களில் ஊழல்
கடந்த ஜூலை 9 ஆம் திகதி அதிபர் மாளிகையில் இருந்து ஒரு கோடியே 78 லட்சம் ரூபாவுக்கும் மேல் பணம் கிடைத்தமை, இரசாயன பசளையை தடை செய்து, நாட்டின் விவசாயத்தை அழித்தமை, அதிபர் என்ற வகையில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அரச நிறுவனங்களில் நடந்த ஊழல் மோசடிகள் சம்பந்தமாக அடுத்த வாரம் முதல் குற்றவியல் விசாரணை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் முறைப்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இந்த நடவடிக்கைக்காக சட்டத்தரணிகள் உட்பட பலர் இணைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.