பாரிய அளவு டீசலை வீட்டில் பதுக்கிய வர்த்தகர்!! கையும் களவுமாக பிடித்த காவல்துறை
கொட்டாவ, மாகும்புர பகுதியில் சட்டவிரோதமாக 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரின் வீட்டின் மாடியிலிருந்து, 500 லிற்றர் தொட்டியும், அவரது வணிக வளாகத்தில் மற்றொரு சிமிலேட் தொட்டியுமாக இரண்டு டீசல் பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த வர்த்தகர் அதிக விலைக்கு வீட்டில் எரிபொருளை விற்பனை செய்வதாக காவல்துறை பரிசோதகர் சுமித் ஜயசிங்கவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடரும் நெருக்கடி
இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை கொள்வனவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அத்துடன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள சிலர் மோசடியாளர்களின் உதவியுடன் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு இவ்வாறு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.