தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகிய அறிவித்தல்
எரிபொருள் அனுமதிப்பத்திரம்
புதிய நடைமுறையின் கீழ் ,தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.
இதற்கான இணையதளம் http://fuelpass.gov.lk என்பதாகும்.
இந்த நடைமுறையின் கீழ் பதிவை மேற்கொண்ட பின்னர் ,சிபேட்கோ அல்லது லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வாராந்தம் தேவையான எரிபொருள் கோட்டாவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேலும் ,தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய QR CODE புதிய அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
பதிவு செய்வது தொடர்பான நடைமுறைகள்
இந்த பதிவை மேற்கொள்ளும் போது இரண்டு வாகனங்களை வைத்திருப்பவர்கள் தமது வீட்டில் இருக்கும் மற்றுமொரு நபரின் தேசிய அடையாள அட்டைக்கு கடவுச்சிட்டுக்கு அல்லது வாகன பதிவு சான்றிதழின் கீழ் இணைந்துகொள்ள முடியும்.
ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
ஒரு தேசிய அடையாள அட்டைக்கு, ஒரு வாகனத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் வகையில் தேசிய அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோக நடவடிக்கை
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் எமக்கு நிதி ரீதியில் சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை காணப்பட்டதாகவும் மூன்று வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட 43,000 மெட்ரிக் தொன் டீசலுடனான முதலாவது டீசல் கப்பலே நேற்று இலங்கையை வந்தடைந்தது. எனவும் தெரிவித்தார்.
இதேபோன்று மற்றுமொரு பெட்ரோலுடனான கப்பல் இம்மாதம் 18 ஆம் திகதி அல்லது 19 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கின்றோம்.
மற்றுமொரு பெட்ரோலுடனான கப்பல் இம்மாதம் 22.அல்லது 23 ஆம் திகதி இலங்கையை வந்தடையும். இவற்றுக்கான கொடுப்பனவு திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுடன் அமைச்சின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
இவை இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதாவது CEYPETCO மூலம் விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.