எரிபொருள் விலை உயர்வு...! பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு
உலகளாவிய எண்ணெய் அதிகரிப்பு காரணமாக ஒரே தடவையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கப்பல்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “முன்னைய மாதங்களின் எரிபொருள் விலையுடன் ஒப்பிட்டே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது.
நாட்டில் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. இருந்தபோதிலும் இலங்கைக்கு வருகைதரவுள்ள எண்ணெய் கப்பல்களில் உள்ள எண்ணெய் விலை சடுதியாக உயர்வடைந்து வருகிறது.

எனவே, ஒரே தடவையில் பாரியளவில் விலை அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காகவே எரிபொருட்களின் விலையைக் குறைந்தது 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தநிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருளை எதிர்வரும் மாதங்களுக்காக விநியோகித்து விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்பார்க்கிறது.
எரிபொருள் விலை
எனவே, தேவைக்கு மேலதிக எரிபொருளைச் சேமித்து வைப்பதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இதேவேளை, உலகச் சந்தையின் மாதாந்த சராசரியின் அடிப்படையிலேயே ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையுமாயின் பொதுமக்களுக்கு விலை நிவாரணம் வழங்க முடியும் என்றபோதிலும் தற்போது அது பற்றிய எதிர்வுகூறல்களை முன்வைக்க முடியாது.
எனினும், மசகு எண்ணெய் விலை விரைவில் குறைவடையுமாயின் மாத இறுதிக்கு முன்னரே விலையைக் குறைக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |