கோட்டாபய தலைமையில் ஆரம்பமானது முக்கிய கட்சிகள் பங்கேற்காத சர்வ கட்சி மாநாடு!
சிறிலங்கா அரச தலைவர் தலைமையில் சர்வகட்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாடு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த மாநாட்டிற்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளுக்கும் கோட்டாபய தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த மாநாட்டில் பங்கேற்பதில்லையென முக்கியமான சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஆகவே சர்வகட்சி மாநாடு என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி மாநாடு நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த சர்வக்கட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரெலோ, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்றுள்ளன.