இதற்கு ஒரே தீர்வு ஆட்சிமாற்றமே- நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்!
இலங்கை மக்களை பட்டினி மற்றும் பஞ்ச நிலைமையில் பாதுகாக்க வேண்டுமாயின், ஆட்சி மாற்றம் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் தோட்ட செயற்குழு தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தற்பொழுது ஆட்சி நடத்தும் பொதுஜன பெரமுன அரசாங்கம், அதிகாரிகளையும் அமைச்சரவையையும் மாற்றம் செய்வதால் நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. என கூறியுள்ளார்.
நாட்டில் தமிழ் கட்சிகளும் தமிழ் பேசும் அனைத்து கட்சிகளும் சிங்கள மக்களுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்வதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த கட்சியாக மலையக மக்கள் முன்னணியும் இணைந்துள்ளது எனவும் வேலுசாமி இராதகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடு ஒரு சட்டம் என்று இலங்கையில் தற்போது வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கபபட்டாலும் அது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனெனில் மூவின சமூகம் சார்ந்த மக்களை கொண்ட நாடு என்ற வகையில் அவரவர் மதங்களுக்கு தனித்தனி சம்பிரதாய முறைப்படி சட்டங்கள் உள்ளன எனவும் வேலுசாமி இராதகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் பால்மா, சீனி, சமையல் எரிவாயு மாத்திரமல்லாமல் பல அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இராதகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், தோட்ட சங்கங்களுக்கு இன்று தொழிலாளர்கள் சந்தாப் பணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சக்கங்களை இல்லாமல் திட்டங்களை செய்து வருகின்றனர் எனவும் இதற்கு பதிலடி வழங்க வேண்டும் எனவும் இராதகிருஷ்ணன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.