பலம்வாய்ந்த நாடுகளின் சூதாட்ட களமாக மாறியுள்ள இலங்கை (படங்கள் இணைப்பு)
இந்த அழிவுகரமான தருணத்திலும் தற்போதைய அரசாங்கம் பிக்பக்கெட் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa)தெரிவித்துள்ளார்.
நாட்டின் அடையாளமாக மாறியுள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நாட்டில் மக்கள் சார்பான அரசை உருவாக்க பொது மக்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் நடத்தும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தொகுதி அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின்(Hirunika Premachandra) ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று (10) கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் புவிசார் அரசியல் பலம்வாய்ந்த நாடுகளின் சூதாட்ட களமாக மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கக் கூடிய, மக்களின் குறைகளை உணர்ந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்திருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மனிதநேயமும் உணர்வும் கொண்ட ஆட்சி செய்யும் நாட்டை உருவாக்க தமக்கு வாக்களிக்குமாறு தாம் கேட்டதாகவும், ஆனால் பலர் வெற்று வீரத்திற்கு வாக்களித்ததாகவும் அதன் விளைவை இன்று முழு நாடும் அனுபவிக்க வேண்டியுள்ளதாகவும்எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்றைய நாட்டிற்கு தேவை மனிதாபிமானமும் உணர்வு பூர்வமான அரசாங்கமும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசியலுக்குப் பதிலாக தேசிய சேவையை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதாக தெரிவித்தார்.


