வெறிபிடித்த எருமை மாட்டுக் கூட்டம் போல் நடந்துகொள்கிறார்கள்! மருத்துவர் ருக்ஷான் பெல்லன சீற்றம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெறிபிடித்த எருமை மாட்டுக் கூட்டம் போல் நடந்துகொள்கின்றனர் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய மருத்துவ நியமனங்கள் சம்பந்தமாக பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள போவதாக சுகாதார அமைச்சை மட்டுமல்லாது மக்களையும் அச்சுறுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன(Dr.Rukshan Bellana) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தொழிற்சங்கம் என்ற வகையில் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு இருப்பதால், அப்படியான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க சட்ட ரீதியான அனுமதிகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை விடுதலைப்புலிகள் தமது இறுதிக்காலத்தில் எப்படி நடந்துக்கொண்டனர். தாமே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் என விடுதலைப்புலிகள் கூறினர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அப்படியான பயங்கரவாத அமைப்பு போன்று வெறிப்பிடித்து, வெறிப்பிடித்த எருமை மாட்டுக் கூட்டங்கள் போல் செயற்படுவதை எம்மால் காண முடிகிறது.
பயங்கரவாத அமைப்பு போன்று செயற்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம் என சுகாதார அமைச்சர், செயலாளர் உட்பட அதிகாரிகளுக்கு கூறுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சு என்ற வகையில் அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற தடையுத்தரவு நடைமுறையில் இருக்கும் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அச்சுறுத்தி, கர்ஜித்து செயற்பட்டு வருகிறது.
அவர்கள் இப்படி அச்சுறுத்துவது நாட்டு மக்களை. இவ்வாறு மக்களுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட இடமளிக்காமல் தடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு உள்ளது எனவும் ருக்ஷான் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.