எரிவாயு தட்டுப்பாட்டால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகளில் பாதிப்பா? விளக்கும் வைத்தியர்!
இலங்கையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என சிறிலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலை கட்டமைப்புக்கள் செயலிழந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு விநியோகிக்கப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான சந்திப்பில் தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சில வேளைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார். எனினும் தற்போது வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு இல்லையெனவும், அதனால் நோயாளர்களுக்கு உணவு சமைப்பதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.