விடுதலைப்புலிகள் மீண்டும் தாக்கலாம்- இந்தியாவை நாடியுள்ள சிறிலங்கா!
சிறிலங்காவில் எதிர்வரும் மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக, சிறிலங்கா, இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் விபரங்களை கோரியுள்ளது.
இந்நிலையில் குறித்த தகவல் தொடர்பில், இந்திய புலனாய்வுப் பிரிவினர், விசாரணை மேற்கொண்டு சிறிலங்காவிற்கு அறிவிப்பார்கள் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் ஏனைய அனைத்துத் தகவல்களும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மே 18ஆம் திகதி விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி மே 13 ஆம் திகதியன்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
