கடும் நெருக்கடியில் இலங்கை அரசு -இந்தியாவிடம் கோரப்பட்ட உதவி
எரிபொருள் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கை அரசு கோரியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதைய நிலவரப்படி வரும் ஜனவரி வரை மட்டுமே எரிபொருள் கையிருப்பு இருக்கும் என அண்மையில் எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்த நிலையில், கடனுதவி கோரப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது.
இதன் காரணமாகவும் எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை இலங்கை நாடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தாக்கத்தால் கடும் அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து அதற்கென அதிகம் செலவிடும் நிலையில் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.