புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவல்- யாழில் சிக்கிய நபர்!
யாழில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்முறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால பகுதியில் 6 வீடுகளில் தங்க நகைகள், பணம் என்பவற்றை திருடியதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.