யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்- போராட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!
யாழ்ப்பாணத்திற்கு, அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்ட போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மைநிலையை அறியும் முகமாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த முற்பட்ட தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் மீது காவல்துறையினர், அதிரடிப்படையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
காவல்துறையினர், படையிரின் அவ்வாறான செயற்பாட்டை கண்டித்தும் நீதி கிடைக்க வேண்டியும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கி கண்டனப் பேரணியாகச் செல்ல அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டும், அன்னையரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், தமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது என்றும் புதிய திகதி தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி முடிவு செய்து அறிவிக்கப்படும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.
ஆகவே தற்போது ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிக்கவும் எனவும் தங்கள் ஒத்துழைப்பு தொடரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.