வெள்ளை வான் கலாசாரம் என்பது இதுவே- விளக்கம் கூறிய கம்மன்பில!
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பில் இப்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன, அந்த ஊடகவியலாளர் கூறிய விடயங்களின் மூலமாக நொந்துபோன ஒருவரே இந்த செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என சிறிலங்கா எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும் இது கோபத்தில் செய்யும் வேலையாக தெரியவில்லை, திட்டமிட்டு இவ்வாறான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தவும் வலியுறுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஊடகவியலாளர் ஒருவரை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முயற்சி மற்றும் ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றமை வெள்ளை வான் கலாசாரம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் மட்டுமே அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
வெள்ளை வான் கலாசாரம் என்பது ஒன்று இரண்டு சம்பவங்களில் ஈடுபடுவதல்ல. தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அவ்வாறு கூற முடியும். எனவே வெள்ளை வான் கலாசாரம் உருவாக்கியுள்ளது என்ற தீர்மானத்திற்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விசாரணையில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தொடர்பில் நாமும் அவதானத்துடன் உள்ளோம். கடந்த 2010-2015 ஆம் ஆண்டுகளில் இதே நிலைமைகள் காணப்பட்ட நிலையில் நாம் ஊடகவியலாளர்களுடன் நின்றோம், இப்போதும் நாம் ஊடகவியலாளர் பக்கமே நிற்கின்றோம்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் மட்டுமே அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படும். எனவே முறையான விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும் என்பதே நாமும் வலியுறுத்திக்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
