கடும் நடவடிக்கைகளுடன் பதவி நீக்கப்படவுள்ள மற்றுமொரு இராஜாங்க அமைச்சர்!
சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தமாக கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்தின் தலைவர்கள் தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டில் பதுங்கி இருந்த வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் முனையத்தின் ஊடாக அழைத்து வந்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வு பிரிவின் அறிக்கை பெறப்பட்டுள்ளதுடன் அரச தலைவர் இது குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடிய பின்னர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.
கைது செய்வதற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், சம்பந்தப்பட்ட வர்த்தகர் நீண்டகாலத்திற்கு முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
அண்மையில் அவர் நாடு திரும்பியதுடன் மேற்படி அரசியல்வாதிகளின் உதவியுடன் அவர் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் முனையத்தின் ஊடாக நாட்டிக்குள் வந்துள்ளார்.
இவ்வாறு நாடு திரும்பிய அந்த வர்த்தகர் அந்த அரசியல்வாதிகளின் உதவியுடன் காவல்துறையிடம் சரணடைந்ததுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வர்த்தகர் எத்தனோல் மதுசாரம் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என கூறப்படுகிறது.
