தமிழர் தாயகப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டம்!
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் 2000 நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினத்தில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்து இன்று 2000 நாட்களை எட்டியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும் கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம், 2000 நாட்களை எட்டியுள்ளமையை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகி, டிப்போச் சந்தியை சென்றடைந்ததோடு, அங்கு கண்டன உரைகளும் இடம்பெற்றன.
மதத்தலைவர்கள் பொதுமக்கள் இணைந்து போராட்டம்
இதேவேளை, வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டவர்களில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலைந்து பல துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிபக் காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் பலர் இருந்து வருகின்றனர் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுடன் அவர்களுக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியுள்ளது.
இனப்படுகொலையை மேற்கொண்டவர்களை கைது செய்ய கோரியும், இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலர கலந்துகொண்டனர்.