100 ரூபாவுக்காக படுகொலை செய்யப்பட்ட பெண்!
இரத்தினபுரி, ஹெலபாத்த மஹிராகல பிரதேசத்தில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட 27 வயதான பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொலை சம்பவம் தொடர்பாக கேஹெல்ஹோவிட்டகம பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடையவர் எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெண் படுகொலை
ஹெலபாத்த பிரதேசத்தில் வேலை செய்து வந்த பெண், பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் ஒரே இடத்தில் தொழில் செய்து வந்துள்ளதுடன் சம்பவம் நடந்த தினத்தில் கணவன் வேலைக்கு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்குச் சென்ற மனைவி வீடு திரும்பாததால், அவரைத் தேடிய கணவன், வீட்டுக்கு அருகில் மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி இருப்பதை கண்டு, அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனினும் பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுபோதையில் கொலை
சம்பவம் நடந்த தினம் பிற்பகல் பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் நின்று கொண்டிருந்த சந்தேக நபர், பெண்ணிடம் 100 ரூபாய் பணத்தை கேட்டுள்ளார்.
பணத்தை கொடுக்க மறுத்ததால் சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணின் உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
காவல்துறையால் கைது
பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, அவரிடம் இருந்த பையை சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் மதுபானத்திற்கு அடிமையானவர் எனவும் மதுபானத்தை அருந்த பெண்ணிடம் பணத்தை கேட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.