பாரிய பள்ளத்தில் குடைசாய்ந்த ஜீப் வண்டி - ஸ்தலத்தில் நபர் பலி!
நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுமார் 50 அடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இன்று அதிகாலையிலேயே அவ்வழியால் சென்ற தொழிலாளர்கள் விபத்து இடம்பெற்றிருப்பதை அவதானித்து நானுஓயா காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நானுஓயா கெல்சி தோட்டத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு சவப்பெட்டியை ஏற்றிச் சென்று ஒப்படைத்த பின்னர், சாரதி தனது வீட்டுக்கு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கெல்சி தோட்டத்தைச் சேர்ந்த டொமினிக் அனுஷன் வயது 21 என்ற ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் தொடர்பில் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




