ரணிலின் கைகளில் இரண்டு முக்கிய அமைச்சுக்கள்!
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளில் இரண்டு முக்கிய அமைச்சுகள் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் பதவியேற்ற புதிய அமைச்சரவையில் நிதி அமைச்சு பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய இரு முக்கிய அமைச்சுக்களும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளிலேயே காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப் பிரமாணம் செய்திருந்த நிலையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பிரதமர் அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.
இதேவேளை, பகல் 1 மணியளவில் 18 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். முக்கிய அமைச்சுக்களாக குறிப்பிடும் போது கல்வி, சுகாதாரம், நீதி, வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற அமைச்சுப்பதவிகளுக்கு இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இன்று வழங்கப்படாத அமைச்சுக்கள்
இதில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, மற்றும் நிதி அமைச்சு பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை.
சிறிலங்கா அரசியல் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தலைவராகவும் அதிபர்களே இதுவரை காலமும் சேவையாற்றியிருந்தனர், இதன்படி, இம்முறையும் பாதுகாப்பு அமைச்சு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
இதேவேளை, இன்று நிதியமைச்சு எவருக்கும் வழங்கப்படாத காரணத்தால் நிதியமைச்சும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன் முன்னாள் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அமைச்சுப் பதவிக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை. அவரும் சில நாட்களில் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சர்வகட்சி அரசாங்கம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரின் நியமனத்தின் பின்னர் இடைக்கால அமைச்சரவை சிறிது மாற்றியமைக்கப்படும்.
அதன் பின்னர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசாங்கத்துக்கான அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
